'அஸ்வெசும' நலன்புரிப் பயனாளிகளைத் துல்லியமாக இனங்காண்பதற்கும், பட்டியல் தயாரிக்கும் பணிகளை அதிக வினைத்திறனுடனும் துல்லியமாகவும் மேற்கொள்வதற்கும் இன்று (28) நிதி அமைச்சில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
இதன்போது, தற்போது நடைமுறையிலுள்ள பயனாளிகளை இனங்காணும் முறையிலுள்ள அளவுகோல்களைத் திருத்தியமைத்தல், பணிகளை விரைவுபடுத்துதல் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பயனாளிகளைத் துல்லியமாக இனங்காண்பது குறித்து விரிவாகக் கவனம் செலுத்தப்பட்டது.
மேலும், சட்டத் திருத்தங்களை மேற்கொள்வது போன்ற நீண்டகால நடவடிக்கைகளுடன், குறுகிய காலத்தில் நடைமுறைப்படுத்தக்கூடிய தீர்வுகளை இனங்காண்பது குறித்தும் இங்கு அவதானம் செலுத்தப்பட்டது.
அத்துடன், வெற்றிடங்களை நிரப்புதல், கிராம உத்தியோகத்தர்களை செயலில் ஈடுபடுத்துதல், கொடுப்பனவு முறைகளைத் திருத்தியமைத்தல் மற்றும் அது தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே, தொழிலாளர் அமைச்சர் மற்றும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன மற்றும் நலன்புரி நன்மைகள் சபையின் அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.


No comments
Thanks for reading….